ulaga magalir thinam,pengal naal



"பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்." -
-வேலுப்பிள்ளை பிரபாகரன்.


பெண் என்னும் பூகம்பம்

துணிவிருந்தால் துயர் அகலும்.
எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும்.
ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக
பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால்
சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை.

போராளியான பெண் ஆணுக்கு நிகராக
அனைத்திலும் மிளிர்கிறாள்;
அல்லாதவள்……
அன்றாட அல்லல் மீள அல்லும்,பகலும் அவதியுறுகிறாள்.
புலம் மாறி வந்து புதிய கல்வி கற்றவர்கள்
பொல்லா விலங்குடைத்து புதிய பலம் பெற்றவர் நாம்
சேலைக் கடைக்குள்ளும் , சின்னத்திரைக்குள்ளும்
புதையுண்டு கிடக்கிறோமே…...
வேண்டாமென்று சொல்லவில்லை
வீறு கொண்டெழுந்து…..
வேகும் விதியோடு வாழ்விற்கேங்கும் எங்கள்
சோதரிகள் கண்ணீரை சிறிதேனும் துடைக்கலாமே.

அன்னையமும் அதை மேவும் பெண்ணியமும்
காலச்சுழிக்குள்ளே காணாமல் போனதுவோ?

வங்காலைச் சிறுபெண்ணின் வலி நிறைந்த கொலை அறிந்தும்
கண் காணா நிலையென்றா கனல் எடுக்க மறந்தோம்?
செந்தாழம் சிதைந்தாற்போல் சிறு தேகம் கிடந்தநிலை
செவ்விழிகள் மொய்த்து எங்கள் சிந்தைக்குள் புகவில்லையா?

பெண்ணியம் பேசி பெருமைகளைக் குவிப்போரே!
கண்ணிய வாழ்வுக்கேங்கும் ஈழப்பெண் கண்ணீரைக் களமேற்றும்!
கண்ணென்றும், கனியென்றும் கவி கொஞ்சில் கொதிப்போரே!
பெண்களைக்……காடை அங்கே கசக்குகிறான்.
காணாமல் கிடப்பது ஏன்?

அல்லைப் பிட்டிக்காய் அழுத கண்ணீர் காயவில்லை
ஆயிரம் அமைப்பிருந்தும் ஐ.நாவின் அம்பலத்தில் ஏறவில்லை
வங்காலை தொடர்கதையாய் வலியின் வரவெழுதி
எங்கால அடுத்த இடியென இதயத்தில் வலித்திருக்க
சொல்லி வைத்தாற்போல வல்லிபுன முன்றலிலே
வானரக்கர் குண்டு போட்டர்.
எண் எட்டின் பெருக்கத்தை எமன் தின்று சென்றான்.
கண்ணுற்றும், காற்றுவழி சேதி கேட்டும்
எண்ணிக்கையற்று எரிமலையாய் எழுந்தோம்….
பின் என்ன?
ஓர் மாதம் கடக்கு முன்னே மல்லாக்கப் படுத்துவிட்டோம்.
அன்றங்கு பட்ட அடி இன்றும் புற்றெடுத்து புரையோடிக்கிடக்கிறது.
மருத்துவப் பெயராலே சிங்களத்தின் மரணப்பரிசுபெற்ற
சின்னப் பெண்ணுடல் சிதையேற்ற முடியாமல் சீரழிந்து அலைகிறது.
ஆதிக்கக் கூப்பாடு அணுதினமும் ரணமாடி அன்னையர் விழியேறி
கண்ணீர்க் கடல் தோண்டுகையில்
பன்னீர்க்குளியலிட்டு பைந்தமிழ்க் கன்னியர்கள்
பக்குவமாய் உள்ளரென பாரெங்கும் பறையறைந்து
சங்கரி முதற்கொண்டு எட்டப்பச் சண்டாளர் சாட்சி சொல்வர்
நாங்களும் கேட்போம், திகைப்போம்…
பொய் என்று பொருமுவோம். பிறகொன்றும் செய்யமாட்டோம்.
மூலைக்குள் முடங்கி முகட்டு விட்டம் பார்ப்போம்
காலங்காலமாக இதுதானே நடக்கிறது.

நாளாந்த நகை மாற்றம். அலங்காரப் பொருட் தேட்டம்
தாயகத்தை விலத்திய தாயகமாய் உலவுகிறோம்.
கார்காலப் பொழுதுகளில் கன்னச் சிவப்பெழுதி
போர் மூண்ட பூமியின் பெருந்துயர் மாற்றவெண்ணா…மாதராய்
முல்லைச் சிரிப்போடு மிடுக்கோடு நடக்கிறோம்.
அக்கையும், தங்கையும் பக்கத்து வீட்டுப் படித்த தோழியும்
சீண்டும் பகை நடுவே….
மானத்தை வேண்டி தினம்தினம் தீக்குளிக்கும் பொழுதுகளில்
வரு…..மானத்தைத் தருமென்றாலே அதைப்பற்றிப் பேசுகிறோம்.

வாதையுற்ற இராணுவ வல்லுறவால் சீவன்விட்ட,
வலியுற்று மனம் நலிந்த பேதையான பெண்களுக்காய்
கோதையர்கள் தனியெழுந்து மேதினியை உலுக்கினோமா?
முக்காடு போட்டுக் கொண்டு பெண் என்னும்
முகம் தொலைத்து முடங்கி விட்டோம்.

துணிவிருந்தால் துயர் அகலும்.
எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும்.
ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக
பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால்
சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை.


ஆக்கியவர் : சகாறா
பதிவு : கரும்புலிகள் உயிராயுதம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails