prabhakaran is alive s.jayananthamoorthy

பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார்.. தலைமை பலத்திலும் கொள்கையிலும் உறுதியாகவே இருந்தது - எஸ்.ஜெயானந்தமூர்த்தி


விடுதலைப்புலிகளின் தலைமை பலத்திலும் கொள்கையிலும் உறுதியாகவே இருந்தது. அவரை எந்தவொரு சக்தியாலும் இலகுவில் அழித்துவிட முடியாது. என தேசியத் தலைவரின் மாவீரர் உரைகள் அடங்கிய நூல் வெறியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 1989 – 2008 ஆண்டு வரையிலான மாவீரர் உரைகள் அடங்கிய தொகுப்பு நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பழ.நெடுமாறனின் அணிந்துரையுடனும் கவிஞர்களான காசி ஆனந்தன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கவிதைகளும் உள்ளடங்கியுள்ளன.

என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஜெயானந்தமூர்த்தி தொடர்ந்து பேசுகையில் “தேசியத் தலைவருடைய இந்த உரைகள் அடங்கிய நூல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். ஆரம்பத்தில் இருந்து இந்த உரைகளை நீங்கள் நன்கு வாசித்து ஆராய்ந்து பார்த்தல் அவரின் கொள்கை எத்தகைய உறுதியானது என்பதை அவதானிக்க முடியும். அது மாத்திரமின்றி விடுதலையை அடைவதற்காக அவர் எத்தனையோ விட்டுக் கொடுப்புகளைச் செய்து இலங்கை அரசுடனும் சர்வதேச சக்திகளுடனும் தமது அமைப்பு மூலமாக பேச்சுக்கனை நடத்தியுள்ளார். ஆனால் இச்சக்திகள் அனைத்தும் நம்பிக்கைத் துரோகமே செய்துள்ளன. இன்றும் அதே கொள்கையைத்தான் இந்த சர்வதேசமும் செய்து வருகின்றது.

எமது மக்களின் விடுதலையே இறுதி மூச்சு என்பதில் அவர் உறுதியாகவே உள்ளார். இந்த உண்மையை தற்போதும் அவருக்கு நெருக்கமானவர்களின் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது. இன்றைய காலகட்டத்தில் என்னால் பல விடயங்களை வெளியே சொல்ல முடியாவிட்டாலும் எமது மக்கள் நம்பிக்கையுன் இருக்க வேண்டும். காலம் வரும்போது அனைத்துமே வெளியே வரும்.

எமது தலைவர் இந்திய இராணுவத்தினரின் காலத்திலும் சரி அதன்பின் இடம் பெற்ற பல சமர்களிலும் சரி தற்செயலாக தனக்கு ஏதும் நேர்ந்தால் தனது உடல் பகைவர்களின் கையில் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் தனது அருகில் போராளிகளை வைத்திருந்தவர். அப்படியானவரின் உடலை முள்ளிவாய்காலில் கண்டெடுத்தோம் என இலங்கை அரசு கூறும் கதையை குழந்தைப்பிள்ளை கூட நம்பாது. இலங்கை அரசு தென்பகுதி மக்களையும் இந்தியாவையும் நம்ப வைக்க நடத்திய நாடகமே இது.

எமது தலைவர் தான் கூட தமிழீழத்தை கைவிட்டால் தன்னையே போராளிகள் சுட்டுக் கொல்வார்கள் என 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் அவரின் கொள்கையையும் உறுதியையும் நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும். எனவே நாம் எமது இலட்சியத்தை அடையும் வரை அரசியல் ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இதுவே இக்காலகட்டத்தில் பொருத்தமானது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails