mdmk vaiko answer for mahinda rajapaksa guest k.p ( kumaran pathmanathan )

கே.பியின் குற்றச்சாட்டிற்கு வைகோ பதில்



இலங்கைத் தீவில் போர்நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு வைகோதான் காரணம் என்று, சிங்கள அரசின் விருந்தாளியாக தற்போது கொழும்பில் இருக்கின்ற குமரன் பத்மநாதன், என் மீது குற்றம் சாட்டி இருக்கிறார். வைகோவின் தேர்தல் பேராசையால், விடுதலைப்புலிகள் பலியாக நேர்ந்தது என்று, ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். இப்படிக் கூறிய குமரன் பத்மநாதன், 2002 ஆம் ஆண்டு இறுதியில், சர்வதேசப் பொறுப்பில் இருந்து பிரபாகரன் அவர்களால் நீக்கி வைக்கப்பட்டவர். பகைவர்களுக்குக் கையாளாகி விடக்கூடாதே என்ற நிலையில், 2008 ஆம் ஆண்டில், சர்வதேச ஊடகத் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டவர்.

2009 மே 18 ஆம் தேதியன்று, பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார் என்று அறிவித்துவிட்டு, மூன்றாம் நாள் பிரபாகரன் இறந்து விட்டார் ; இனி விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நானே தலைவர் என்றும், தன்னைத்தான் பிரபாகரன் தலைவர் பொறுப்பை வகிக்கச் சொன்னார் என்றும், ஒரு உலக மகா பொய்யைச் சொல்லி, தனக்குத்தானே முடிசூடிக் கொண்டவர்.
இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்படும், தமிழ் ஈழ மக்களின் போராட்ட வரலாற்றில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட துரோகப்படலத்தின் தொடர்ச்சியாக, தற்போது குமரன் பத்மநாதன் தமிழ் ஈழ விடுதலைக்கு எதிராக, கொலைபாதகன் ராஜபக்சே அரசின் கைக்கூலியாக, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்கிறார்.

அவர் தனது பேட்டியில், தமிழ் ஈழம் என்பது அழிந்து போன லட்சியம் என்றும், விடுதலைப்புலிகள் சாதாரண மக்கள் மீது வன்முறையை ஏவி, துன்பம் விளைவித்ததற்காகத் தான் வருந்துவதாகவும், அதற்காக இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தாம் மன்னிப்புக் கோருவதாகவும் கூறி உள்ளார்.
இலங்கையில் போரை நிறுத்துவதற்கு, தி.மு.க. தரப்பிலே முயற்சித்ததாகவும், இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அதற்கான ஒரு திட்டத்தைச் சொன்னதாகவும், அந்தத் திட்டத்தின்படி, விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரண் அடைகிறோம் என்று அறிவிக்க வேண்டும்; சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற குறிக்கோளைக் கைவிட்டு, மாற்று அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்க வேண்டும் என்றும், அப்படி ஒரு அறிவிப்பை சிதம்பரமே தயாரித்து இருந்ததாகவும் பத்மநாதன் கூறி உள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து, வைகோவுக்கும், பழ. நெடுமாறனுக்கும் தெரிவிக்கக் கூடாது என்றும், தேர்தல் காலமாதலால், போர் நிறுத்தம் ஏற்பட்டால் காங்கிரஸ்-தி.மு.க.வுக்குப் பெயர் வந்துவிடும் என்றும், அதனால், இந்தத் திட்டத்தைப் புலிகள் ஏற்க விடாமல் தடுக்க முயல்வோம் என்றும், புலிகளின் அரசியல் பிரிவுச் செயலாளர் நடேசனிடம் கூறப்பட்டதாகவும், நடேசன் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனிடம் கூறியதால், மகேந்திரன் என்னிடம் கூறி விட்டாராம்.

தமிழ் ஈழ விடுதலைக் கோரிக்கையைப் புலிகள் கைவிட்டால், விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்று நடேசனிடம் நான் கூறி விட்டதால், இந்தப் போர் நிறுத்த முயற்சி கைகூடாமல் போனதாகவும், பத்மநாதன் என் மீது பழி சுமத்தி உள்ளார்.

பத்மநாதன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய். போர்நிறுத்தம் ஏற்பட்டால், என்னைவிட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. எவ்வகையிலாவது போர்நிறுத்தம் ஏற்பட்டு விடாதா என்று நாங்கள் துடித்தோம்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், புலிகள் அமைப்புக்கும், அவர்கள் அங்கே எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி, எந்தக்காலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது. ஈழத்தின் நிலைமைக்கு ஏற்ப, அம்மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளை, பிரபாகரன் மேற்கொள்வார்.

இதே பத்மநாதன் கொடுத்த பேட்டியில், அவரது கூற்றையே அவர் முரண்பட்டு இன்னொரு இடத்தில் சொல்கிறார்.
2008 டிசம்பர் 31 இல் பிரபாகரன் தன்னோடு தொடர்பு கொண்டதாகவும், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, முக்கியத் தலைவர்களை வெளிநாட்டுக்கு வெளியேற்றி, சில வெளிநாடுகளின் உதவியோடு போர்நிறுத்தம் ஏற்படுத்தும் யோசனையைத் தாம் கூறியதாகவும், அதற்கு பிரபாகரன் அவர்கள், இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டதாகவும் கூறுகிறார்.

ஆயுதங்களைக் கீழே போடவே ஒப்புக்கொள்ளாத பிரபாகரன், சிதம்பரத்தின் யோசனைப்படி ஆயுதங்களையும் கீழே போட்டு, சரண் அடைந்து தமிழ் ஈழத்தையும் கைவிட்டு விட, கனவிலாவது உடன்படுவாரா?
நான் இதில் எதிர்ப்புத் தெரிவித்து, அதனால் முயற்சி நின்று போனதாக அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள்.
அதே பேட்டியில், இன்னொரு இடத்தில், பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி, தன்னிடம், தனது தந்தை, தாய், தங்கை, தம்பியைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யச் சொன்னதாகவும், ஹெலிகாப்டர் மூலமும், பின்னர் கப்பல் மூலமும் அவர்களைத் தப்புவித்து, வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல, ஒரு ஆசிய நாட்டுடனும், இரண்டு ஆப்பிரிக்க நாடுகளுடனும் தான் திட்டமிட்டதாகவும், நார்வேயில் உள்ள நெடியவன் அதற்குப் பணம் கொடுக்காமலும், புலிகளின் வெளிநாட்டு விமானப்பிரிவுத் தலைவர் அச்சுதன், விமானிகளை அனுப்பாமல் கெடுத்து விட்டார்கள் என்றும் கூறி உள்ளார்.
ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு தப்பிச் செல்ல பிரபாகரன் சம்மதிக்க மாட்டார் என்று சொல்லிவிட்டு, பிறிதொரு இடத்தில் கடைசியாக தப்பிச் செல்ல வருவார் என்றும் கூறி உள்ளார்.

குமரன் பத்மநாதன் கோலாலம்பூரில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விமானத்தில் வசதியுள்ள உயர்வகுப்பில் தான் பயணித்ததாகவும், கொழும்பு சென்றவுடன் ராஜபக்சேயின் சகோதரன், தமிழ் ஈழ மக்களின் படுகொலைக்குக் காரணமான கொடியோருள் ஒருவனான ராணுவச் செயலாளர் கொத்தபய ராஜபக்சே வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு ராஜபக்சே தம்மை அன்போடு கைகுலுக்கி வரவேற்று கேக்கும், தேநீரும் தந்து உபசரித்ததாகவும், மிக்க கனிவோடு தம்மிடம் பேசியதாகவும், அதன்பின் தான் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் தனக்கு எந்நேரமும் உதவியதாகவும், உலகில் யாருடனும் பேசும் தொலைபேசி வசதியும், தொடர்புகொள்ள மின் அஞ்சல் வசதியும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

சிங்கள அரசுக்கும், தனக்கும் பரஸ்பரப் புரிதலும், நம்பிக்கையும், நட்பும் வளர்ந்துகொண்டே வருவதாகவும் சொல்லி உள்ளார். கொத்தபயவிடம், யுத்தம் நீண்ட காலத்துக்கு முன்பே யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறினாராம்.
கடல்புலிகளின் தலைவர் சூசை, அரசியல் பிரிவுச் செயலாளராக இருந்த தமிழ்செல்வன், நிதிப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர் அமைப்பிலே ஆதிக்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், 2002 கடைசியில் பிரபாகரன் தன்னைப் பொறுப்பில் இருந்து விலகச் சொன்னதாகவும் ஒப்புக் கொண்டு உள்ளார்.
இமாலய ஆபத்துகளே தன்னைச் சூழ்ந்தாலும், பிரபாகரன் இலட்சியத்தைக் கைவிட மாட்டார், சரண் அடைய மாட்டார் என்பதை, புலிகளின் எதிரிகளும் ஒப்புக் கொள்வார்கள்.
2008 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி, பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரையில் திட்டவட்டமாக அவர் ஒன்றை உலகத்துக்கு அறிவித்தார்.

பெரிய ஆயுத பலம் கொண்ட பாரிய சக்திகளை எதிர்த்து நாங்கள் நிற்கிறோம். எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும், எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தனை சக்திகள் எதிர்கொண்டாலும், தமிழரின் சுதந்திர விடிவுக்காகத் தொடர்ந்து நாம் போராடுவோம். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரம் ஆகிவிட்ட எமது மாவீரர்களின் வழியே சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமாக! புலிகளின் தாகம், தமிழ் ஈழத் தாயகம்.
தமிழ் ஈழ விடுதலையைத் தன் உயிரினும் மேலான இலட்சியமாகக் கொண்டு இருந்த பிரபாகரனை, அதைக் கைவிடச் சொல்லி, இந்திய அரசினர் யோசனை சொன்னார்களாம்.

விஸ்வரூபம் எடுக்கின்ற கேள்வி யாதெனில், இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் என்று உலகின் பல நாடுகள் வேண்டுகோள் விடுத்து, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், இந்திய அரசு ஏன் ஒப்புக்குகூட போர் நிறுத்தம் என்ற சொல்லை இலங்கை அரசிடம் கூறவில்லை?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் போர் நிறுத்தத்துக்கு ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 48 மணி நேரத்தில், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்து விட்டு வந்தபோது, பிரதமர் வீட்டு வாயிலில் பத்திரிக்கையாளர்கள் இந்தியப் பிரதமர் போர் நிறுத்தம் வேண்டினாரா? என்று கேட்டனர்.
ஆத்திரத்தோடும், எரிச்சலோடும், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது; விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று உடம்பை முறுக்கிக் கொண்டு திமிராகப் பேசும் தைரியம் அந்த அதிபருக்கு எப்படி வந்தது? இந்திய அரசு கொடுத்தத ஊக்கம்தான் காரணம்.
இதைத்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் சொல்லி வருகிறேன். இலங்கையில், சிங்கள அரசு புலிகளுக்கு எதிராக நடத்தும் போரை இயக்கியதும், திட்டமிட்டதும், ரடார்களும், ஆயுதங்களும், ஆயிரம் கோடி வட்டி இல்லாத பணமும் கொடுத்தது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான். பிரதமரே இலங்கைக்குத் தாங்கள் ஆயுத உதவி செய்ததை ஒப்புக்கொண்டு, 2008 அக்டோபர் 2 இல் எனக்கு கடிதம் எழுதி உள்ளார்.


வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அவர்களின் கோபாலபுரம் வீட்டு வாசலில், போர் நிறுத்தத்தை இந்தியா கேட்குமா? என்று செய்தியாளர்கள் வினவியதற்கு எரிச்சலோடு பதில் சொன்னார்: அது எங்கள் வேலை அல்ல; சிங்கள அரசுக்கும்-புலிகளுக்கும் நடக்கும் சண்டை என்றார்.
2009 பிப்ரவரி 18 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் அதே பிரணாப் முகர்ஜி, அப்பாவி தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்கிறார்கள் என்று அக்கிரமமான குற்றசாட்டையும் கூறினார்.


இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் 2007 இல் செய்யப்பட்டது. இந்தியக் கடற்படையின் உதவியோடு விடுதலைப் புலிகளுக்கு வந்த எட்டுக் கப்பல்களை தாங்கள் கடலில் மூழ்கடித்ததாக இலங்கையில் கடற்படைத் தளபதி வசந்த கரனன்கொட 2009 மார்ச்சில் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.
ராஜபக்சே அறிவித்த ஒரு மூவர் குழுவும், மன்மோகன் சிங்க அறிவித்த மூவர் குழுவும், டெல்லியில் ஐந்து முறையும் கொழும்பில் மூன்று முறையும் சந்தித்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வெற்றி பெறத் திட்டமிட்டன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே விடுதலைப் புலிகளைப் போரில் முடித்துவிட வேண்டும் என்று இந்திய அரசு விரும்புவதாக, இலங்கை அமைச்சர் ஒருவரே கூறிவிட்டார்.
இலங்கை நாடாளுமன்றத்தில், இந்திய உதவியால்தான் புலிகளைத் தோற்கடித்தோம் என்றே அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.


லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, பிஞ்சுக் குழந்தைகள்-கர்ப்பிணி பெண்கள் - முதியவர்கள் உட்பட படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசும் ஒரு காரணம். ராஜபக்சேவின் போர்க்குற்றத்தில், இந்தியாவின் காஙகிரஸ் அரசுக்கும் பங்கு உண்டு என்று தொடர்ந்து நான் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி வருகிறேன்.
அதற்காக என் மீது தேசத் துரோக குற்றச்சாட்டில் இரண்டு வழக்குகளை கருணாநிதி அரசு ஏவி உள்ளது.
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இரத்தப் பழிக்கு இந்திய அரசு ஆளாகி விட்டது; குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்; எங்கள் எதிர்காலச் சந்ததிகள் இன்றைய இந்திய அரசை மன்னிக்க மாட்டார்கள் என்று எழுத்து மூலமாக பிரதமரிடம் குற்றம் சாட்டி உள்ளேன்.


இந்தத் தமிழ் இனத் துரோகச் செயலுக்கு, கலைஞர் கருணாநிதி உடந்தையாகச் செயல்பட்டார் என்பதே என் குற்றச்சாட்டு.
இந்தப் பழியில் இருந்து தப்பிக்கவும், என் மீதே பழி சுமத்தவும், கடந்த ஆண்டிலேயே உளவுத்துறையின் ஏற்பாட்டில், பத்மநாதன் இப்போது அவிழ்த்து விட்டு உள்ள கோயபல்ஸ் பொய்களை அப்போதே சொன்னார்கள். அது எடுபடவில்லை.
அனைத்து உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக இராஜபக்சே நிறுத்தப்படுவார் என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ள என்னைக் களங்கப்படுத்த, இராஜபக்சேவின் கைக்கூலி ஆகிவிட்ட குமரன் பத்மநாதனைத் தற்போது பயன்படுத்தி உள்ளார்கள்.


இதில் வேதனை என்னவெனில், நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத் தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி இருக்கிறார். மத்திய அமைச்சர் பதவிகள் என்னை நாடிவந்தபோதும் நிராகரித்தவன், 2004ஆம் ஆண்டில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்தவன் நான்.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடேசன் என்னிடம் பேசும்போது, தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டதா அண்ணா? என்று கேட்டார்.
கொஞ்சம் நெருடல் இருக்கிறது. ஆனால், அணி மாற மாட்டேன்; தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்றேன்.
அதற்கு அவர் நீங்கள் போட்டியிட சிவகாசித் தொகுதி ஒதுக்கப்படுகிறதா? என்றார்.
தற்போது விருதுநகர் தொகுதி அது. ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுகிறது என்றேன்.


நீங்கள் ஒருவர் நாடாளுமன்றத்துக்குச் சென்றால், ஐநூறு எம்.பி.க்கள் எங்களுக்காகச் செல்வதாக நினைப்போம். எனவே, நீங்கள் போட்டியிட வேண்டும் என்றார்.
நான் யோசிக்கிறேன் என்றேன். அன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் தொடர்பு கொண்டார். அண்ணா, பலத்த சண்டை நடக்கிறது. மிகவும் சிரமப்பட்டு சேட்டிலைட் போனில் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு நீங்கள் அவசியம் போட்டியிட வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் விரும்புகிறார் என்று குறிப்பிட்டார். இது குறித்து யோசித்து முடிவு எடுப்பேன் என்றேன்.
அன்று நடந்த இந்த உரையாடல் அருகில் இருந்த என் இயக்க முன்னோடிகளுக்குத் தெரியும்.

மே 10ஆம் தேதி அன்று கடற்புலிகளின் தலைவர் சூசை என்னிடம் பேசினார். காயம்பட்ட தமிழ் மக்களின் புண்களில் புழுக்கள் நெளிகின்றன. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் சிலரை இந்திய அரசு ஒரு குழுவை அனுப்பிப் பார்வையிடச் செய்யுங்கள் என்றார். மே 11 கடைசி நாள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொன்னேன். அடுத்த நான்கு நாட்களுக்குள் கோரமான போரை சிங்கள அரசு நடத்தப் போகிறது. இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்கத் திட்டமிட்டு விட்டனர். இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழர்களை அழிக்க சிங்கள அரசு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு ஆயத்தமாகி விட்டது என்று குறிப்பிட்டேன்.
மே 12 அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் காடன் பிரௌன் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் உள்ளிட்டத் தலைவர்களுக்கு தமிழர்களின் துயரத்தை மின் அஞ்சலில் வடித்துப் போரை நிறுத்த மன்றாடி செய்தி அனுப்பினேன்.
நான் எந்தப் பதவியிலும் இல்லை. என் மனதில் ஏற்பட்ட பதற்றத்தால் நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்றே செயல்பட்டேன்.

மே 13 வாக்குப் பதிவு முடிந்து இரவு பத்தே கால் மணிக்கு நடேசன் என்னிடம் பேசினார். ஜெயித்துவிடலாமா? அண்ணா என்றார்.

என் தொகுதியில் கோடிக்கணக்கில் ஆளும் தரப்பு பணத்தைக் கொட்டிவிட்டது. சொற்ப வித்தியாசத்தில் ஜெயிக்கலாம் என்றேன். பிரபாகரன், நடேசன் உள்ளிட்டோரின் நிலைமையைப் பற்றிக் கவலைப்பட்டபோது “பயப்படாதீங்க அண்ணா! நாங்க வெல்வோம் அண்ணா! என்றார்.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி, அவரையும் அவரது மனைவியையும், புலித்தேவனையும் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது. துரோகிகளுக்கு வரலாற்றில் மன்னிப்புக் கிடையாது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எதிரிகளுக்குப் பிடித்துக் கொடுத்தான் ஜூடாஸ். 30 வெள்ளிக் காசுகளுக்காக இத்துரோகத்தைச் செய்த ஜூடாஸ், தனது குற்றத்தை உணர்ந்தவனாக உள்ளம் உடைந்து, முப்பது காசுகளை வீசி எறிந்துவிட்டு, மரக்கிளையில் கழுத்தில் சுருக்கிட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டு மடிந்தான். ஆனால், தன் துரோகத்தை உணர்ந்து வருந்தி தற்கொலை செய்து கொண்டான் என்று உலகில் எவரும் சொல்வது இல்லை.
தன் தவறை உணர்ந்த ஜூடாஸூக்கே மன்னிப்பு இல்லை என்றால், குமரன் பத்மநாதன் - கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்0பே கிடையாது.

துரோகிகளும், எதிரிகளும் தூற்றினால்தான் நீ சரியான பாதையில் போவதாக அர்த்தம் என்று தந்தை பெரியார் சொன்னார்.

ராஜபக்சே கூட்டம் வைகோவையும், நெடுமாறனையும் தூற்றுகின்றபோது அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்கள் என்பதை, தன்மானம் உள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள்!


‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்
24.08.2010 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

7 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. குமரன் பத்மநாதனின் உள்ளக்குமுறல்.September 7, 2010 at 7:06 PM

    அன்பு மருகர் ஜெயபாலனுக்கு,



    கீழ்க்காணும் தகவலை எனக்கு நம்பிக்கையான ஒருவர் மூலம் அனுப்புகின்றேன். இத்தகவலை அனைத்துப் புலம்பெயர் உறவுகளுக்கும், தமிழ்நாட்டு உறவுகளுக்கும் குறிப்பாக நெடுமாறன் அண்ணா, வைகோ அண்ணா அவர்களுக்கும் தவறாது தெரியப்படுத்தவும்.

    அன்புடன்,

    மாமா பத்மநாதன்.



    என்னைக்கொண்டுவந்து இங்கு தனிமைச்சிறையில் அடைத்து வைத்துக்கொண்டு தாங்கள் விரும்பியதை செய்து கொண்டிருக்கின்றார்கள்.நானாக யாரையும் பார்க்கவோ, சந்திக்கவோ முடியாது.நான்கூறுவதாகச் சொல்வதெல்லாம் வெறும் பித்தலாட்டம். வெளியில் நடப்பவற்றை யாராவது வந்து இரகசியமாகக் கூறினால்தான் எனக்குத் தெரிய வரும். அண்மையில் DBS ஜெயராசிற்கு நான் கொடுத்ததாக ஒருபேட்டியொன்று பரப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.இதற்கும் எனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.இது முழுக்க முழுக்க இந்திய உளவுத்துறையும், இலங்கை உளவுத்துறையும், இந்திய உளவுத்துறையின் கையாள் DBSஜெயராசுமூலம் இதைச்செய்துகொண்டிருக்கின்றார்கள்.இனத்துரோகி கருணாநிதியும், காங்கிரசுக்கட்சியும் சேர்ந்து, வரும் சட்டசபைத் தேர்தலில் வெல்வதற்காக இக்கொடிய செயலைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். நாங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் நெடுமாறன் அண்ணர், வைகோ அண்ணர் பற்றி பாவிகருணாநிதிதான் வீணான வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கின்றான்.இவனுக்கு சாவேவராதா? இவனே ஒரு யமன். இவனுக்கு தமிழினத்தை பணத்திற்காகவும், பதவிக்காகவும் கொலைசெய்வதுதான் ஒரே கொள்கை.முள்ளிவாய்க்கால் கொலைக்கு முற்றுமுழுதாக இவனும், சோனியாவுந்தான் காரணம்.இவன் என்று பாடையில் போறானோ அன்றுதான் தமிழனுக்கு விடுதலை.இன்னும் என்னென்ன திட்டங்களைதீட்டியிருக்கின்றார்களோ தெரியாது.தயவுசெய்து ஒன்றையும் நம்பவேண்டாமென்று சொல்லவும்.நெடியவனும் இதைப்புரிந்து கொள்வான்.எம் தலைவர் சாகவில்லை. அவர்வந்து எல்லா உண்மைகளையும் புரியவைப்பார்.அதுவரை என்னை உயிரோடு வைத்திருப்பார்களோ தெரியாது.இவர்களின் உளவியல் போரை ஒற்றுமையாக முறியடிப்போம்.



    புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.

    ReplyDelete
  3. குமரன் பத்மநாதனின் உள்ளக்குமுறல்.September 7, 2010 at 7:14 PM

    அன்பு மருகர் ஜெயபாலனுக்கு,
    கீழ்க்காணும் தகவலை எனக்கு நம்பிக்கையான ஒருவர் மூலம் அனுப்புகின்றேன். இத்தகவலை அனைத்துப் புலம்பெயர் உறவுகளுக்கும், தமிழ்நாட்டு உறவுகளுக்கும் குறிப்பாக நெடுமாறன் அண்ணா, வைகோ அண்ணா அவர்களுக்கும் தவறாது தெரியப்படுத்தவும்.
    அன்புடன்,
    மாமா பத்மநாதன்.
    என்னைக்கொண்டுவந்து இங்கு தனிமைச்சிறையில் அடைத்து வைத்துக்கொண்டு தாங்கள் விரும்பியதை செய்து கொண்டிருக்கின்றார்கள்.நானாக யாரையும் பார்க்கவோ, சந்திக்கவோ முடியாது.நான்கூறுவதாகச் சொல்வதெல்லாம் வெறும் பித்தலாட்டம். வெளியில் நடப்பவற்றை யாராவது வந்து இரகசியமாகக் கூறினால்தான் எனக்குத் தெரிய வரும். அண்மையில் DBS ஜெயராசிற்கு நான் கொடுத்ததாக ஒருபேட்டியொன்று பரப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.இதற்கும் எனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.இது முழுக்க முழுக்க இந்திய உளவுத்துறையும், இலங்கை உளவுத்துறையும், இந்திய உளவுத்துறையின் கையாள் DBSஜெயராசுமூலம் இதைச்செய்துகொண்டிருக்கின்றார்கள்.இனத்துரோகி கருணாநிதியும், காங்கிரசுக்கட்சியும் சேர்ந்து, வரும் சட்டசபைத் தேர்தலில் வெல்வதற்காக இக்கொடிய செயலைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். நாங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் நெடுமாறன் அண்ணர், வைகோ அண்ணர் பற்றி பாவிகருணாநிதிதான் வீணான வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கின்றான்.இவனுக்கு சாவேவராதா? இவனே ஒரு யமன். இவனுக்கு தமிழினத்தை பணத்திற்காகவும், பதவிக்காகவும் கொலைசெய்வதுதான் ஒரே கொள்கை.முள்ளிவாய்க்கால் கொலைக்கு முற்றுமுழுதாக இவனும், சோனியாவுந்தான் காரணம்.இவன் என்று பாடையில் போறானோ அன்றுதான் தமிழனுக்கு விடுதலை.இன்னும் என்னென்ன திட்டங்களைதீட்டியிருக்கின்றார்களோ தெரியாது.தயவுசெய்து ஒன்றையும் நம்பவேண்டாமென்று சொல்லவும்.நெடியவனும் இதைப்புரிந்து கொள்வான்.எம் தலைவர் சாகவில்லை. அவர்வந்து எல்லா உண்மைகளையும் புரியவைப்பார்.அதுவரை என்னை உயிரோடு வைத்திருப்பார்களோ தெரியாது.இவர்களின் உளவியல் போரை ஒற்றுமையாக முறியடிப்போம்.
    புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.

    ReplyDelete
  4. புலிகள், எப்போதேனும் அப்பாவி சிங்கள மக்களை தேடிப்பிடித்துக் கொன்றதுண்டா? பாலியல் துன்பம் இழைத்ததுண்டா? அவர்கள் வாழும் இடத்தில் குண்டு போட்டதுண்டா? அதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறார் கே.பி.? ஆனால், அப்பாவித் தமிழ் மக்களை சிங்கள இராணுவம் கொன்றதற்கு லட்சக்கணக்கான ஆதாரங்கள் உண்டே?

    காட்டுக்குள் வழி தவறி வந்த சிங்களப் பெண் ஒருத்தியை தமிழர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கேள்விப்பட்டதும், அதற்கு மிகக் கடுமையான தண்டனை விதித்தவர் பிரபாகரன். புலிகளால் யுத்தத்தில் கொல்லப்பட்ட சிங்கள இராணுவ வீரர்களுக்கு அவர்கள் நாட்டு மரியாதையுடன் நல்லடக்கம் செய்தவர் பிரபாகரன். பிணைக் கைதியாகப் பிடித்துவைக்கப்பட்ட சிங்கள இளைஞன் ஒருவனது மனைவி அவனைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது உடனே அனுமதி கொடுத்தது புலிகளது இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தைத்தான் கே.பி. கொச்சைப் படுத்துகிறார்.

    ReplyDelete
  5. எட்டு தமிழ் இளைஞர்களின் ஆடைகள் அப்புறப்படுத்தப்பட்டு அம்மணக் கோலத்தில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, இழுத்து வரப்பட்டு, சிங்களச் சிப்பாய்கள் எட்டி உதைத்து மிதித்து மண்டியிட்டு உட்காரவைத்து எந்திரத் துப்பாக்கியால் பின்னந் தலையில் சுட்டு, இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கச் செய்து சாகடித்தார்களே..! இதை இணைய தளங்களில், சனல் 4 தொலைக்காட்சியில் காண்பித்தார்களே. இதற்கு என்ன பதில் இருக்கிறது?

    சிங்களவன் வெறிகொண்டு திலீபனின் நினைவிடத்தை உடைத்தான். மாவீரர் துயிலும் இடங்கள் உடைக்கப்பட்டன. வாழ்க்கையின் வசந்த காலத்தில் சுகங்களைத் தேடாமல் மண்ணுக்காக மடிந்த எம் இளைஞர்களும், இளம் பெண்பிள்ளைகளும் கல்லறைக்குள்கூட நிம்மதியாய் கிடக்கக் கூடாது என்பதற்காக, எல்லாக் கல்லறைகளையும் உடைத்தானே... அதைப்பற்றி தனது பேட்டியில் ஒரு சொல் சொல்ல, கே.பி-க்கு முதுகெலும்பு உண்டா?
    ஆபரேஷன் எல்லாளனில் பங்கேற்ற கரும்புலி வீரர்களின் உடலை நிர்வாணமாக்கி, சிங்களத் தெருவில் ஊர்வலம் விட்டதும், பெண் போராளிகளைப் பாலியல் வல்லுறவு செய்து அந்தப் படங்களை வெளியில் விட்டதும் கே.பி. கண்ணுக்கு காட்டுமிராண்டித்தனமாகத் தெரியவில்லையா?

    ReplyDelete
  6. தமிழீழம் ஓர் நாள் மலர்ந்தே தீரும்....! அந்நாள்தான் தமிழர்களுக்குப் பொன்நாள்!

    ReplyDelete
  7. வைகோவை பற்றி கலிங்கபட்டிகரர்களுக்குதான் நன்கு தெரியும் .
    தமிழனுக்கே தமிழ் உணர்வு இல்லை, ஆப்புறம் எப்படி தெலுங்கனுக்கு தமிழ் உணர்வு வரும் .

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails